Malayagam
Home » பிரதமராக தெரிவான லிஸ் ட்ரஸ்… முதலில் ராஜினாமா செய்த இந்திய வம்சாவளி அமைச்சர்

பிரதமராக தெரிவான லிஸ் ட்ரஸ்… முதலில் ராஜினாமா செய்த இந்திய வம்சாவளி அமைச்சர்

பிரித்தானிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவான நிலையில், அவரது அமைச்சரவையில் இடம்பெற விருப்பமில்லை எனக் கூறி, ராஜினாமா செய்துள்ளார் இந்திய வம்சாவளி அமைச்சரான பிரிதி பட்டேல்.

பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவாகியுள்ளார். செவ்வாய்க்கிழமை அவர் ராணியாரை சந்தித்த பின்னர் பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் இடம்பெற விருப்பமில்லை என தெரிவித்து முதல் ஆளாக தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் உள்விவகார அமைச்சரான பிரிதி பட்டேல்.

மேலும், நாட்டுக்காக தமது பொது சேவையை தொடர வேண்டும் என்பது தமது விருப்பம் எனவும், அதை எந்த பதவியும் இல்லாமல் முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், லிஸ் அமைச்சரவையில் பிரிதி பட்டேல் இடம்பெற வாய்ப்பில்லை என்ற தகவல் கசிந்த நிலையிலே, அவர் முந்திக்கொண்டு அமைச்சர் பதவியை துறந்ததாகவும் கூறப்படுகிறது.

லிஸ் ட்ரஸ் தமது புதிய அமைச்சரவையை அறிவிக்கும் போது அதில் பிரிதி பட்டேல் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் கண்டிப்பாக இடம்பெறப் போவதில்லை என்றே நம்பப்படுகிறது.

மேலும், தற்போதைய அட்டர்னி ஜெனரலான சுயெல்லா பிரேவர்மேன் என்பவரே லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் உள்விவகார அமைச்சராக பொறுப்புக்கு வருவார் எனவும் தகவல் கசிந்துள்ளது.

இந்த நிலையில், புதிய பிரதமரால் பதவியை பறிக்கும் முன்னர் தாமாகவே ராஜினாமா செய்வது முறை என்பதால், பிரிதி பட்டேல் முந்திக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நமது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸை நான் வாழ்த்துகிறேன், மேலும் நமது புதிய பிரதமராக அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2019ல் போரிஸ் ஜோன்சன் பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னர், அவரது அமைச்சரவையில் உள்விவகார அமைச்சராக பொறுப்பேற்றார் பிரிதி பட்டேல். மேலும், புலம்பெயர்வோர் தொடர்பில் பல விவாதத்துக்குரிய முடிவுகளை முன்னெடுத்தவர் பிரிதி பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed