பாரீஸில் தன் காதலருடன் காரில் பயணிக்கும்போது நடந்த விபத்தில் பலியானார் இளவரசி டயானா. அவர் உயிரிழக்கும் முன் தன்னிடம் பேசியதாக தெரிவித்துள்ளார் தீயணைப்புத்துறை வீரர் ஒருவர்.
பாரீஸில் நடந்த விபத்தொன்றில் பிரித்தானிய இளவரசி டயானா உயிரிழந்ததை அறிவோம். ஆனால், தான் டயானாவுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து, அவரை உயிருடன்தான் மருத்துவமனைக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர்.
1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 31ஆம் திகதி, பாரீஸிலுள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் சிக்கினார் பிரித்தானிய இளவரசி டயானா.
அவர் உயிரிழந்துவிட்டதாகத்தான் இதுவரை செய்திகள் தெரிவித்தன. ஆனால், தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக தெரிவித்துள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர்.
விபத்து நடந்த இடத்துக்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான Xavier Gourmelonம் ஒருவர். ஏதோ ஒரு விபத்து, யாரோ ஒரு பெண் விபத்தில் காயமடைந்துள்ளார் என்றே எண்ணிய Xavierக்கு, விபத்தில் சிக்கியது இளவரசி டயானா என்பது தெரியாது.
படுகாயமடைந்து காருக்குள் சிக்கியிருந்த டயானாவை மெல்ல வெளியே எடுத்த Xavierஇடம், கடவுளே, என்ன நடந்தது என்று கேட்டாராம் டயானா. சிறிது நேரத்தில் டயானாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே, தான் பிரபலமான ஒருவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கிறோம் என்பதெல்லாம் தெரியாத Xavier, அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளித்துள்ளார். அவர் டயானாவுக்கு இதய மசாஜ் அளிக்க, சில விநாடிகளுக்குப் பின் சுவாசிக்கத் துவங்கினாராம் டயானா.
தான் டயானாவை ஆம்புலன்சில் அனுப்பும்போது அவருக்கு உயிர் இருந்தது, அவர் உயிர் பிழைத்துக்கொள்வார் என்றுதான் நினைத்தேன். ஆனால், மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக பின்னர் கேள்விப்பட்டபோது நான் மிகவும் அப்செட்டாகிவிட்டேன் என்கிறார் Xavier.
அவருக்கு உள்காயங்கள் இருந்ததை அறிவேன் என்று கூறும் Xavier, ஆனால், அன்று அங்கு நடந்த எதுவும் எனக்கு மறக்கவில்லை, அந்த நினைவுகள் எப்போதுமே என்னுடன் இருக்கும் என்கிறார்.
அவர் இளவரசி டயானா என்பது எனக்குத் தெரியாது என்று கூறும் Xavier, அவர் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டபிறகுதான் மருத்துவ உதவிக் குழுவினரில் ஒருவர் அது இளவரசி டயானா என தன்னிடம் கூறியதாக தெரிவிக்கிறார்.
வாழும்போது நேர்மறை மற்றும் எதிர்மறை என பல்வேறு காரணங்களுக்காக உலகின் கவனம் ஈர்த்தவர் டயானா. அவர் இறந்த பிறகும் அவர் குறித்த தகவல்கள் புதிது புதிதாக வெளியாகி இன்னமும் கவனம் ஈர்த்துக்கொண்டுதான் உள்ளன.